விளைவுகளை விரைவில் பசில் சந்திப்பார்! விமல் வீரவங்ச பதிலடி
இலங்கையின் நலன் கருதி உண்மைகளைப் பகிரங்கமாக குரல் கொடுத்ததாலேயே எனது அமைச்சுப் பதவியை சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய பறித்துள்ளார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தனது வீட்டில் வைத்து நேற்று மாலை ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நான் உள்ளிட்ட எனது கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் எதிரணி பக்கம் அமரமாட்டோம். அரச பக்கம் இருந்தே சுயாதீனமாகச் செயற்படுவோம். எனக்கு நடந்த அநீதிக்கு நீதி கிடைத்தே தீரும்.
எனது அமைச்சுப் பதவி பறிபோக நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவே முழுக்காரணம். அதற்கான விளைவுகளை அரசியல் ரீதியில் அவர் விரைவில் சந்தித்தே தீருவார். நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குள் சென்றமைக்கும் பசில் ராஜபக்ச பதில் சொல்லியே ஆகவேண்டும்.
நான் அமைச்சரவையிலிருந்து நீதிக்காகவே குரல் கொடுத்தேன். நாட்டின் நலன் கருதி உண்மைகளைப் பகிரங்கமாக உரைத்த படியால் எனது அமைச்சுப் பதவியை கோட்டாபய பறித்துள்ளார். எனினும், நீதி வெல்லும்; உண்மை ஒருபோதும் சாகாது என்றார்.