அதிரடியாக கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச!!
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வாக்குமூலம் அளிப்பதற்காக தலங்கம காவல்நிலையத்திற்கு வந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.
போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த விமல் வீரவங்ச, நாட்டின் சுயாதீனமான அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ள அடிப்படை உரிமையின் அடிப்படையில், தாய்நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்கள் நினைவுத்தூபிக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தவே நாம் அங்கு சென்றோம்.
சட்டம் அனைவருக்கும் சமமானது
ஆனால், அந்த உன்னதமான செயலுக்கு அநாவசியமாகத் தடையை ஏற்படுத்திய பாதுகாப்புத் தரப்பினர், இப்போது எங்களை குற்றவாளிகளைப் போல் வாக்குமூலம் அளிக்க காவல் நிலையத்துக்கு வருமாறு கட்டளையிட்டு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேடைகளில் கூறுகின்றார். ஆனால், நடைமுறையில் அது அவ்வாறு ஒருபோதும் செயற்படவில்லை.
நீதி அமைச்சுக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்பட்டுள்ள மல்வானை மாளிகையைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக தற்போதைய அரசோ அல்லது காவல்துறையினரோ இதுவரை எந்தவொரு சட்டப் படியிலான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
நாம் ஒரு பொது இடத்துக்கே அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றோம். ஆனால் எமக்கு எதிராக ஒரு விதமான சட்டம் பாய்கின்றது. அதேவேளை, அரசின் சொத்தான மாளிகையை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் முற்றாக மௌனமாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |