விமல் வீரவன்சவை கைது செய்ய நடவடிக்கை...! எதிர்கொள்ளத் தயார் என்று கூக்குரல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள போர் நினைவிடத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பாக, விமல் வீரவங்சவுக்கு எதிராக இன்று காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வீரவங்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வழக்கு விசாரணை
இவ்வாறான பின்னணியில், எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போர் வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்த மேற்கொண்ட முயற்சி தொடர்பில் வழக்கு தொடரப்படுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "போர் வீரர்களை நினைவு கூருவதற்கும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் இடையூறு விளைவிக்கப்பட்டால், அது குறித்து வழக்குத் தொடரப்பட்டால் அதனை எதிர்கொள்ள நாங்கள் ஒருபோதும் தயங்கமாட்டோம்" என்று குறிப்பிட்டார்.
[UCB9IWZ ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |