டெலிகிராம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் அதிரடி கைது
இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படுவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குறித்த பெண் நேற்று (18) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
டெலிகிராம் குழுவொன்றின் ஊடாக இந்த மோசடியைச் செய்வதற்கு சந்தேகநபர் அனுசரணை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மோசடி செய்யப்பட்ட பணம்
அத்துடன் இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி வைப்புச் செய்யப்பட்ட 542,877 ரூபாயில், 66,999 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட பண மோசடி தொடர்பாக 2024.02.10 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |