இதய வடிவில் கருப்பை - பெண்ணுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள்
அமெரிக்காவில் பெண்மணி ஒருவருக்கு இதய வடிவிலான கருப்பை இருந்தநிலையில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இது மிக மிக அரிதானது என்கிறார்கள் மருத்துவர்கள்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த கேரன் ட்ராய். 25 வயதான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கர்ப்பமுற்றார். இதனை அறிந்து ட்ராய் மிகுந்த சந்தோஷமடைந்திருக்கிறார். இதனையடுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் ட்ராய் ஸ்கான் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது தான் அந்த அதிர்ச்சி தகவல் அவருக்கு தெரிந்திருக்கிறது.
இரண்டு அதிர்ச்சி தகவல்கள்
இரண்டு அதிர்ச்சி தகவல்கள். முதலாவது, ட்ராய்க்கு இதய வடிவில் கருப்பை இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். அதில் இரட்டை கரு வளர்வதாக மருத்துவர்கள் சொல்லியபோது ட்ராய் அதிர்ந்து போனார். ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இதய வடிவ கருப்பை இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆனால் 500 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த இதய வடிவ கருப்பையில் இரட்டை குழந்தைகள் உருவாகும் அரிய நிகழ்வு நடைபெறும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனக்கு இதய வடிவில் கருப்பை இருந்தது கூட கவலை அளிக்கவில்லை என்றும், இரட்டை குழந்தைகள் என்பதால் இருவரும் நலமாக இருக்கிறார்களா? எனது பற்றியே சிந்தித்ததாகவும் ட்ராய் தெரிவித்தார்.
உயர் இரத்த அழுத்த சிக்கல்
முதல் 34 வாரங்கள் அவர் நலமாகவே இருந்திருக்கிறார். அதன் பிறகு அவருக்கு pre-eclampsia எனும் உயர் இரத்த அழுத்த சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அறுவை சிகிச்சை மூலமாக 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி இரட்டை குழந்தைகளை வெளியே எடுத்திருக்கின்றனர் மருத்துவர்கள். இந்த குழந்தைகளுக்கு ரேயான் மற்றும் ரேலின் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிறந்தது முதல் 27 நாட்களுக்கு இரு குழந்தைகளும் NICU-வில் வைத்து பராமரிக்கப்பட்டிருக்கின்றனர்.
16 மாதங்கள் வயது
முதன் முதலில் தனது குழந்தைகளை பார்த்ததும் அவை மிகவும் ஒல்லியாக இருந்ததால் அச்சப்பட்டதாகவும் அதன் பின்னர் சகஜ நிலைக்கு திரும்பியதாகவும் சொல்லியிருக்கிறார் ட்ராய். தற்போது ரேயான் மற்றும் ரேலின் இருவருக்கும் 16 மாதங்கள் வயது ஆவதாகவும், இருவரும் நலமுடன் இருப்பதாகவும் ட்ராய் தெரிவித்திருக்கிறார்
