காவல்துறையினருக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை!
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை ஆறு மாதங்களுக்குள் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சிந்தக குணரத்னவுக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ (Johnston Fernando) பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இலங்கையில் தற்போது வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் அவர் , 2020ஆம் ஆண்டைவிட 2021ஆம் ஆண்டு வீதி விபத்துகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில், நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற மொத்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை 308 ஆகும். 2020 ஆம் ஆண்டில், களனிகம மற்றும் குருந்துகஹஹெதக்ம ஆகிய இடங்களில் ஐந்து அபாயகரமான வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில், பின்னதுவ, அபரெக்க, குருந்துகஹஹெதக்ம, அங்குனகொலபெலஸ்ஸ, அதுருகிரிய மற்றும் களனிகம ஆகிய இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் 07 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த விபத்துக்களினால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில் மொத்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை 461 ஆகும். அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகளவான விபத்துக்கள் சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டதன் காரணமாக நிகழ்ந்துள்ளன.
அதிவேக வீதிகளில் ஓய்வறைகளை அமைப்பது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.
