உலக நாடுகள் மீண்டும் இலங்கைக்கு உதவ முன்வரவு
அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து உலக நாடுகள் மீண்டும் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் உதவ முன்வராத பல தரப்பினர் தற்போது இலங்கையுடன் இணைந்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க உலகத் தலைவர்கள் முன்வந்துள்ள நிலையில், அவர்கள் பேச்சுக்களையும் முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது இலங்கைக்கான சர்வதேச உதவிகளும் நாளாந்தம் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நெருக்கடியான காலகட்டத்தில் ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றார் எனவும் அவர் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலையை உறுதிப்படுத்த தற்போது பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சியை பொறுப்பேற்க மறுத்த தரப்பு
மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் காரணமாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய போது, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சிலர் ஆட்சியை பொறுப்பேற்க மறுத்து தப்பி ஓடியதாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையில் கடந்த ஆண்டு இருந்த நீண்ட எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகள், மின்வெட்டு போன்ற பல பிரச்சினைகளை தீர்க்கவும் மக்களுக்கு நிவாரணமளிக்கவும் ரணில் விக்ரமசிங்க முன்வந்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.