'இன்று உலக யானைகள் தினம்' - மானிடர் அறிந்து கொள்ளவேண்டியது..!
இன்று உலக யானைகள் தினம். இந்த நாளின் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்தப் படத்தின் கதை ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்தப் படம் 2012 ஓக.12இல் வெளியானது. அன்றைய தினம் முதல் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆபிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்று யானைகளை இரண்டு பிரிவாக வகைப்படுத்தியுள்ளனர். ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் வசிக்கின்றன. 7 அடி முதல் 12 அடிவரை உயரமும் 5 ஆயிரம் கிலோ வரை எடையும் கொண்டவையாகும்.
காட்டிலிருந்த யானைகளை மனிதன் பிடித்து வந்து பழக்கினான். "மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி யானை கட்டிப் போர் அடித்த சோழநாடு" என்ற சொற்றொடர் முற்காலத்தில் விவசாயத்திற்கு யானைகள் எவ்வாறு பயன்பட்டன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
யானைப்படை மிகவும் முக்கியமான ஒன்று
பண்டையத் தமிழ் மன்னர்களின் நான்குவகை படைகளில், குஞ்சரப் படை எனப்படும் யானைப்படை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
போரிடுவதற்கும், விவசாயத்திற்கும் பயன்பட்ட யானைகள், ஆலயங்களில் தெய்வ காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தந்தத்திற்காக யானைகளைக் கொல்வது அதிகரித்த காரணத்தால் 1872 ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் அரசு, யானைகளைப் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவித்தது. அதன்பிறகு சர்க்கஸ், ஆலயங்கள், திருமடங்கள் ஆகியவற்றில் மட்டுமே யானைகள் வளர்க்கப்பட்டு வந்தன.
உலத்திலே இதுவரை 22 வகை யானை இனங்கள் அழிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளன. தற்போது, உலகில் ஆபிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. ஆசிய யானைகள் 55,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானை ஒரு முரட்டு விலங்கோ, கொடிய விலங்கோ அல்ல. மிகவும் மதிநுட்பம் வாய்ந்த விலங்கு
அதன் எல்லைக்கோட்டை அது நன்கு அறியும். பல நேரங்களில் காடுகளில் யானைகளை எதிர்கொள்ளும்போது அது, தான் இருக்கும் இடத்தை மரத்தின் கிளைகளை உடைத்து எச்சரிக்கும். அதன் பிறகு ஓர் எச்சரிக்கை ஒலியை எழுப்பும். அதையும் மீறி அருகில் செல்வோரை தாக்க வருவதைப் போல காதுகளை விரித்து வாலை சுருட்டியபடி நீண்ட பிளிறலுடன் ஓடி வரும். அப்போதும் மனிதன் அதை எதிர்க்கத் துணிந்தால் அவ்வளவு தான். நொடிப் பொழுதில் எதிர்ப்படுவோரை துவம்சம் செய்துவிடும்.
அசாதாரணமாக இறுதி நொடியில் கூட பலரை கொல்லாமல் விட்டு விடும் இரக்க குணமும் அதற்கு உண்டாம்.
இத்தகைய தன்மைகளைக் கொண்ட யானையின் தனி சிறப்புக்களை பேசுகிறது இந்த ஒளியாவணம்,