உலக தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் புதிய கட்டடம் - அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை
உலக தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (25) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபொர்ட் பகுதியில் நூற்று எட்டு (108) ஏக்கர் நிலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்குபற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்வு ஏற்பாட்டு குழுவினர்.
உலகத் தமிழர் வரலாற்று மையமானது முழுமையாக பிரித்தானிய கம்பெனி சட்டம் 2006இற்கு அமைவாக இலாபநோக்கமற்ற அமைப்பாக 18. 06. 2015 பதிவு செய்யப்பட்டு பின்னர் தொண்டு நிறுவன சட்டங்களுக்கு அமைவாக ஒரு தொண்டு நிறுவனமாக பதியப்பட்டு பொறியியலாளர்கள், சட்டவாளர்கள், கணக்காளர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் கொண்ட 11 அறங்காவலர்களுடன் செயற்பட்டு வருகின்றது.
உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்திற்குள் மாவீரர் பணிமனை, தமிழர் பண்பாட்டு நடுவம், மக்கள் நலன் காப்பகம், தமிழர் விடுதலை நடுவம், அற்புத விநாயகர் ஆலயம், அற்புத அந்தோணியார் ஆலயம் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் பிரித்தானிய சட்ட திட்டத்திற்கு அமைவாக பதிவுசெய்யப்பட்டு செயற்பட்டு வருகின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.
விழுமியங்களை பாதுகாக்கும் அதேவேளை, எமது கலைகளை வளர்த்தெடுக்கும் பாரிய பணியும் எமது தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தலையாய கடமையை கண்முன் நிறுத்தி உலகத் தமிழருக்காக “உலகத் தமிழர் வரலாற்று மையம்” உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் அமையவுள்ள திட்டங்களான மாவீரர் அரங்கம், மாவீரர் நினைவாலயம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம், விளையாட்டுத்திடல், ஆலயம், 04 கிலோ மீற்றர் நீளமான நினைவு நடைபாதை, ஆவணக் காப்பகம், நூலகம், தமிழர் கலாச்சார மண்டபம், அரும்பொருட் காட்சியகம், விவசாயம், கால்நடை வளர்ப்பு, படகுத்துறை மேலும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக உலக தமிழர் வரலாற்று மைய நிர்வாகி தெரிவித்தார்.
