சட்டத்தரணிக்கு அதிர்ச்சி கொடுத்த புழு சோற்றுப்பார்சல்
மட்டக்களப்பு (Batticaloa) நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவான சோற்று பார்சலில் புழு அவதானிக்கப்பட்டதை அடுத்து சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்ற நிலையில் சுகாதார பிரிவினர் உடனடியாக குறித்த கடையை சோதனையிட்டனர்.
இதன்போது அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன், கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கரட் கறியில் புழு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த கடையில் வழமையாக மதிய உணவான சோற்று பார்சலை சட்டத்தரணி ஒருவர் வாங்கி சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று மதிய உணவான சோற்று பார்சலை வாங்கி தனது காரியாலயத்தில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதில் உள்ள கரட் கறியில் புழு ஓடுவதை கண்டுள்ளார்.
இதனையடுத்து சாப்பாட்டு பார்சலுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்துக்கு சென்று குறித்த கடைக்கு எதிராக முறைப்பாடு செய்தார்.
உணவுப் பொருட்கள் மீட்பு
தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பொது சுகாதார பரிசோதகர்கள், குறித்த கடையை முற்றுகையிட்டு சோதனை செய்ததையடுத்து அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு மற்றும் சிற்றுண்டிகள் தயாரிக்கும் பல உணவுப் பொருட்களை குளிரூட்டியில் இருந்து மீட்டனர்.
அத்துடன் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



