தடுத்து வைக்கப்பட்ட தீபச்செல்வனின் நூல்கள்...! ஊடக சுதந்திர இயக்கம் கவலை
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டமைக்கு ஊடக சுதந்திர இயக்கம் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் அமைப்பாளர் லசந்த டி சில்வா மற்றும் செயலாளர் திலீஷா அபேசுந்தர இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “இந்தியாவின் சென்னை நகரில் அச்சிடப்பட்ட எழுத்தாளர் தீபச்செல்வன் (Theepachelvan Piratheepan) அவர்களின் இலக்கியப் படைப்புகள் 360 பிரதிகள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட போது அவை இலங்கை சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கியக் கேள்விகள்
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பின்வரும் முக்கியக் கேள்விகள் எழுகின்றன:
- ஒரு எழுத்தாளரின் இலக்கியப் படைப்புகளைச் சுங்கத்துறை எந்தச் சட்ட அடிப்படையில் தடுத்து நிறுத்துகிறது ?
- இந்நூல்கள் தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் எனக் கருதப்படுவதற்கான காரணம் என்ன ?
- இவ்வாறு ஒரு படைப்பைத் தடுக்க வேண்டிய அளவிற்கு அது உரிய சட்ட மற்றும் நிபுணத்துவ மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டதா ?

இந்தச் சம்பவம், நாட்டில் நிலவும் கருத்துச் சுதந்திரம், வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் கலைச் சுதந்திரம் ஆகியவற்றின் நிலையைப் பற்றிய கடுமையான கவலைகளை எழுப்புகிறது.
குறிப்பாக ஒரு மொழியில் எழுதப்பட்டிருப்பதற்காக இலக்கியப் படைப்புகளைத் தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு முரணானதாகும்.
உரிய நடைமுறைகள்
ஒரு ஜனநாயக சமூகத்தில் எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை பெற்றிருக்க வேண்டும்.
இத்தகைய தடைச் செயல்கள், சமூகத்தில் அச்சத்தையும் தன்னடக்கத்தையும் உருவாக்கிப் படைப்பாற்றலையும் சிந்தனையையும் ஒடுக்கக்கூடியவையாகும்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக உடனடியாகத் தெளிவான விளக்கத்தை வழங்கி தடுத்து வைக்கப்பட்டுள்ள நூல்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.
மேலும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க உரிய நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்