களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதல் : சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான தகவல்
புதிய இணைப்பு
கொம்பனித்தெரு பகுதியிலுள்ள இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுடன் வந்த சந்தேகநபர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி அவர்களை கைது செய்ய பல காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் யோஷித ராஜபக்சவுடன் வந்த குழுவினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் மோதல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) இரண்டாவது மகனான யோசித ராஜபக்ச (Yoshitha Rajapaksa) இரவு நேர களியாட்ட விடுதியில் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு (23.03.2025) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள விடுதிக்கு சென்ற யோசித ராஜபக்ச, அவரது மனைவி உள்ளிட்ட குழுவினர் குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கை
விடுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை யோசித தரப்பு ஏற்க மறுத்தமையினால் முறுகல் நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரவு விடுதியின் வழக்கமான நுழைவு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு ஊழியர்கள் அடையாள மணிக்கட்டு பட்டைகள் அணியுமாறு கூறியுள்ளனர்.
இதற்கு அந்த குழு இணங்க மறுத்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு அது மோதலாக மாறியுள்ளது. இது உடல் ரீதியான வன்முறையாக மாறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இரவு விடுதியில் இருந்த பவுன்சர்கள் பின்னர் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
யோசித குழுவின் தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கொம்பனி தெரு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்