முச்சக்கர வண்டி ஓட்டத்தை காணொளி எடுத்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
முச்சக்கர வண்டி ஓட்டப் பந்தயத்தை காணொளி பதிவு செய்து கொண்டிருந்த இரு இளைஞர்கள் மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் பாணந்துறை நல்லுருவ மொரவின்ன பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜயவீர லியனகே தேஷான் பெரேரா என காவல்துறையினர் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி போட்டி

களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி முச்சக்கரவண்டி போட்டியொன்று இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிள்களில் போட்டியை காணொளி எடுத்துக்கொண்டு மற்றுமொரு இளைஞர் குழு வந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
மின்கம்பத்துடன் மோதியதில்

நல்லுருவ பகுதியில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் பலத்த காயமடைந்த இரு இளைஞர்களும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்ட போதிலும், பாணந்துறை அடிப்படை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், பலத்த காயங்களுக்கு உள்ளாகி அவர் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி பிரசான் விஜேதுங்கவினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.