அமெரிக்காவில் பரபரப்பு : ட்ரம்பின் விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்குச் சொந்தமான புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ சொகுசு விடுதிக்குள் (ரிசார்ட்) அத்துமீறி நுழைய முயன்ற ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள இந்த விடுதிக்குள் இன்று(22) அதிகாலை சுமார் 1.30 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கான் எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது.
வட கரோலினாவைச் சேர்ந்தவர்
இதனையடுத்து ரகசிய சேவை முகவர்கள் மற்றும் பாம் பீச் கவுண்டி ஷெரிஃப் துணை அதிகாரி ஆகியோர் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர் வட கரோலினாவைச் சேர்ந்தவர் என்றும், சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
வார இறுதி நாட்களில் விடுதியில் தங்கும் ட்ரம்ப்
ட்ரம்ப் பெரும்பாலும் வார இறுதி நாட்களை தனது விடுதியில் கழித்தாலும், இந்த சம்பவத்தின் போது அவர் வெள்ளை மாளிகையில் இருந்தார். மனைவி மெலனியா ட்ரம்பும் அவருடன்தான் இருந்தார் என கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தொடர்ந்து இதுதொடர்பாக ரகசிய சேவை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |