அமெரிக்காவால் சிறிலங்கா அரசாங்கத்துக்குள் வெடித்த அதிர்வு- கோட்டாபயவுக்கு பறந்தது கடிதம்
கெரவலப்பிட்டிய யுகதானவி மின்நிலையத்தில் உள்ள பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு மாற்றுவது தொடர்பில் ஆளும் அரசாங்க கட்சிகளுக்கு இடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக 10 கூட்டாளி கட்சிகள் அரசுக்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அரசாங்கத்தின் கூட்டாளி கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி மற்றும் அபெ ஜன பால கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து உடனடியாக கலந்துரையாடல் நடத்தக் கோரி, பத்து அரசாங்க கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மூன்று பக்கக் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் எரிவாயு விநியோக ஏகபோகத்தை ஒரு நிறுவனத்திற்கு வழங்குவது ஒரு தீவிரமான விடயம் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
நமது மக்கள் கட்சியின் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில,லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, இந்த கடிதத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.வீரசிங்க, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழு கடந்த வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் கலந்துரையாடல்களை நடத்தியது, ஆனால் இந்த கலந்துரையாடல் தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.