உக்ரைன் போருக்கான முடிவு ஆரம்பம்..! நாட்டு மக்களிடம் ஜெலன்ஸ்கி உறுதிமொழி
உக்ரைனின் பிரதான நகரங்களில் ஒன்றான கெர்சன் நகரில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேறியதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நகரைப் பார்வையிட்டுள்ளார்.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டதையடுத்து ரஷ்ய படைகள் அங்கிருந்து வெளியேறின.
அதேவேளை, அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷ்ய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றினர்.
ரஷ்ய போர்க் குற்றங்கள்
இதற்கிடையே, கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷ்ய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
புலனாய்வாளர்கள் ரஷ்ய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள், படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக ரஷ்ய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன எனவும் தெரிவித்தார்.
நகரின் நிலைமை
இந்நிலையில், கெர்சன் நகரில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேறியுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நகரைப் பார்வையிட்டார்.
அங்குள்ள படைவீரர்களிடம் நகரின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அதிபரைப் பார்த்த மக்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.
அப்போது பேசிய அவர் கெர்சன் நகரில் ரஷ்ய ராணுவம் வெளியேறியது போரின் முடிவுக்கான ஆரம்பம் என தெரிவித்தார்.