1000 தேசிய பாடசாலைகள் - சர்ச்சைக்குரிய பிரதமரின் கருத்து : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
1000 தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் மாகாணங்களுக்கு வழங்கப்படாது என ஹரிணி அமரசூரிய கூறியது தவறானது என முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் (Sarveswaran) தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையின் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய தவறான கருத்துகளை கூறிவருகிறார்.
13ஆவது திருத்தச் சட்டம்
இது மிகவும் முக்கியமான ஒரு விடயம் மாகாண சபைக்கு உரித்தான விடயம். ஹரிணி அமரசூரிய கூறிய கருத்தை பகிரங்கமாக வாபஸ் பெற வேண்டும்.
13ஆவது திருத்தச் சட்டத்திலே கல்வி என்பது மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட விடயம் என்பதுடன் சிறப்பு பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாகாணத்திற்கு உரியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளை இவ்வாறு கையகப்படுத்த முனைவது அரசியல் யாப்பிற்கு முரணானது, இது பற்றி தெளிவான அறிவித்தலை பிரதமர் வழங்க வேண்டும். அவரது தவறான கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும்" என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
