சீரற்ற காலநிலையால் முல்லைத்தீவில் 110 குடும்பங்கள் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தற்போதைய காலநிலை தொடர்பான புள்ளிவிபர தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதனடிப்படையில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 அங்கத்தவர்களும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 122 அங்கத்தவர்களும், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 18நபர்களும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 17 நபர்களும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 46 குடும்பங்களை சேர்ந்த 142 அங்கத்தவர்களும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 அங்கத்தவர்களுமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடையிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை பெய்துவருவதோடு தொடர்ச்சியாக சில இடங்களில் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் காணப்படுகிறது.