தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் வழித்தடத்திற்கான வலியுறுத்தல்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
எனவே அதன் முதல் கட்டமாக அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலமும், நிர்வாக ஏற்பாடுகளுக்கு ஊடாகவும் காலத்திற்கு காலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு மீளக் கையளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கான தீர்வு
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காணும் வகையில் அதிபருக்கம் தமிழ் தரப்புக்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக, நேற்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
மேலும், காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவை நல்லெண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
35 வருட வலியுறுத்தல்
தமிழ் மக்களின் விவகாரங்களை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி மற்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர் என்ற வகையில்,
அதிபரின் கலந்துரையாடல்களில் இரட்டை வகிபாகத்தினை கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஈடேற்ற முடியும் என்று சுமார் 35 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
