பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட 16 வெளிநாட்டவர்கள் கொழும்பில் கைது
இலங்கையில் தங்கியிருந்து விசா விதிமுறைகளை மீறி இணையம் வழியாக சட்டவிரோத பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பதினாறு சீனப் பிரஜைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் குறித்த சந்தேகநபர்கள் நேற்று(23.02.2026)கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழு சில நாட்களுக்கு முன்பு கொழும்பு 05, ஜாவத்த வீதி, டான் கரோலிஸ் மாவத்தையில் அமைந்துள்ள ஒரு இடத்தில் தற்காலிகமாக குடியேறியதாக காவல்துறையின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கை
சம்பந்தப்பட்ட இடத்தில் சில சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாக கறுவாத்தோட்டம் காவல்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழு இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது.
இந்த சோதனையின் போது, சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 3,280 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசாரணை
மேலும், தங்குமிடத்தில் சோதனை நடத்தியபோது, விசாரணை அதிகாரிகள் 23 மடிக்கணினிகள், 11 கையடக்க தொலைபேசிகள், 07 இணைய ரவுட்டர்கள் மற்றும் 09 குரல் மொழிபெயர்ப்பாளர்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 23 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்த சீன நாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணி, இந்த நாட்டைச் சேர்ந்த பல்வேறு நபர்களை ஏமாற்றி இந்த நிதி மோசடிகளைச் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |