தேசபந்துவின் வழக்கு! தேடப்பட்டு வந்த காவல்துறை அதிகாரி அதிரடி கைது
2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் காவல்துறை பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்ததிலிருந்து அவர் வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று (23) அவர் இலங்கைக்கு திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
2023 டிசம்பர் 31 அன்று, வெலிகமவின் பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றப்பிரிவை சேர்ந்த ஒரு காவல்துறை சார்ஜென்ட் உயிரிழந்ததுடன் மற்றும் மற்றொருவர் காயமடைந்திருந்தார்.
8 சந்தேக நபர்கள்
அதனைதொரடர்ந்து, ஒரு சோதனையின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், பின்னர் வெலிகம காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய வானை பின்தொடர்ந்து சென்று பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் நெவில் சில்வா மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, அப்போதைய காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்ய மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
தேசபந்து பதவி நீக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அதன்படி, அப்போதைய காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து, தொடர்புடைய குழுவின் அறிக்கை தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று ஒருமனதாக அறிவித்த நிலையில், நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |