நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டங்கள் : விசாரணைகள் தீவிரம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் குறித்து சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயற்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
சிறைச்சாலைகளில் அதிக நெரிசல்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் இருந்ததா? என்பது குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே எம்மால் உறுதியாகக் கூற முடியும்.

சிறைச்சாலைகளில் உள்ள அதிக நெரிசல் நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையாகும். சிறைச்சாலைக்குள் பல பிரச்சினைகள் உருவாகின்றன.
வழக்குகள் தேவையற்ற முறையில் தாமதமடைதல், அறிக்கைகள் கிடைக்காமை, போதைப்பொருள் கைதுகள் அதிகரிப்பு ஆகியன சிறைச்சாலை நெரிசல் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.
தற்காலிக நடவடிக்கை
காலி மஹமோதர பழைய வைத்தியசாலை, கண்டி போகம்பரை சிறைச்சாலை ஆகிய இரண்டையும் நாங்கள் சிறைச்சாலைகளாக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பவை அல்ல. எமக்கு வேறு திட்டங்கள் உள்ளன.

ஆனால் இந்த நேரத்தில் உடனடி நடவடிக்கையாக சில மாதங்களுக்கு மட்டுமே அந்தப் படியை எடுத்தோம். சில மாதங்களுக்கு மட்டுமே அந்த இடங்களில் சிறைச்சாலைகள் நடத்தப்படும். தீர்வுகள் கிடைக்கும் போது அந்த இரண்டு சிறைச்சாலைகளும் நீக்கப்படும்" என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |