இலங்கையில் அரசுடைமையாக்கப்பட்டுள்ள பல கோடி பெறுமதியான தங்கம் மற்றும் பணம்
இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களால் சேகரிக்கப்பட்ட 140 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் பணம் உள்ளிட்ட சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் (F. U. Wootler) தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 40 சந்தேகநபர்களில் 18 பேர் இதுவரை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
இஷாரா செவ்வந்தி கைது
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்றத்தை உதாசீனப்படுத்தும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்களை வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசாரணைகளும், சர்வதேச சுற்றி வளைப்புக்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் பிரதி பலனாக இதுவரையில் 40 சந்தேகநபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவ்வாண்டுக்குள் 18 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற கட்டடத்துக்குள் கனேமுல்ல சஞ்சீவ என்ற சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
எனினும் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தேடப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் நேபாளத்தில் இலங்கையின் விசேட காவல்துறை குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இஷாரா செவ்வந்தியுடன் மேலும் ஒரு பெண் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத சொத்துக்கள்
சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடைமையாக்கும் செயற்திட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 2024இல் செப்டெம்பர் 21ஆம் திகதியிலிருந்து இது வரை 73 கோடி ரூபா பெறுமதியான 354 பவுண் தங்கம், 72 வாகனங்கள், 35 வீடுகள், 37 ஏக்கர் நிலப்பரப்பு, 67 கோடி ரூபா பணம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 1,268 கிலோ கிராம் ஹெரோயினுடன் 56,000 சந்தேகநபர்களும், 1863 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 64 690 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 14,280 கஞ்சா மற்றும் கேரள கஞ்சா, 552 கிலோ கிராம் ஹசீஸ், 302 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 35 இலட்சம் போதை மாத்திரைகள் என்பவும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை குறித்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
