மன்னார் கடலில் படகு விபத்து : கடங்றொழிலாளர் ஒருவர் கடலில் மூழ்கி பலி!
மன்னார் - வங்காலைப்பாடு கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று (15) அதிகாலை 4 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரின் மீன்பிடிப் படகும் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரின் மீன்பிடிப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை
இந்த விபத்தின் போது படகுகள் இரண்டும் பலத்த சேதமடைந்த நிலையில் படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் கடலில் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

மற்றைய கடற்றொழிலாளர்கள் நீண்ட நேரம் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்தவர் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்த வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மற்றைய கடற்றொழிலாளர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ள நிலையில் விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடல் தொழிலுக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த இந்தத் துயர சம்பவம் மன்னார் கடற்றொழிலாளர் சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |