படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட இலங்கையர்கள் - திண்டாடும் ராஜபக்ச தரப்பு
இன ,மத வெறியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று பொருளாதார நெருக்கடியால் திண்டாடுகின்றது என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikkalanathan).
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டமானது ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது.
எனவே இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டிய தேவையில்லை. மக்கள் வாழ முடியாத நிலையை தீர்க்கும் எந்தத் திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை.
அரசாங்கம் நிர்ணய விலையை தளர்த்தியுள்ளதால் எந்தப்பொருளையும் எந்த விலைக்கும் விற்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் சாதாரண மக்களின் வாழ்க்கை படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.