சிறிலங்காவின் நெருக்கடிகளை தீர்க்குமா புதிய சீர்திருத்தம்! அமைச்சரவையின் அனுமதிக்காக நாளை.....
அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையின் அனுமதிக்காக அனுப்பப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றையும் சுயாதீனமாக ஆக்குவதற்கு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நோக்கப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநரை அரசியலமைப்பு சபையின் கீழ் கொண்டு வருவதற்கும் புதிய திருத்தம் முன்மொழிகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, திருத்தங்களின் அடிப்படையில் 21வது சீர்திருத்ததில் இலங்கையின் குடிமகனாக இல்லாத அல்லது இலங்கையின் குடிமகனாக இருக்கும் போது மற்றும் ஒரு நாட்டின் குடிமகன் ஒருவர் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கத் தகுதி பெறமாட்டார்.
அரசியலமைப்பு பேரவையில் பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், இலங்கை தொழில் வல்லுநர் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அரச பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ஏற்கனவே பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கு புறம்பாக நாடாளுமன்றில் பெரும்பான்மை விருப்பத்தை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்.
இந்த பேரவைக்கு சபாநாயகர் தலைவராக இருப்பார். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களை அரசியலமைப்பு பேரவையேஅரச தலைவருக்கு பரிந்துரைக்கும். சுயாதீன ஆணைக்குழுக்கள், தேர்தல், பொது சேவை, தேசிய காவல்துறை, கணக்காய்வு சேவை, மனித உரிமைகள், நிதி, எல்லை நிர்ணயம், தேசிய கொள்வனவு ஆணைக்குழுக்கள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுக்களாக அமையும்.
அரசாங்கத்தால் பொருட்கள் மற்றும் சேவைகள், பணிகள், ஆலோசனை சேவைகள் போன்றவை, கொள்முதல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும்.