190 பில்லியன் ரூபாவை வெளிநாட்டிற்கு கடத்திய தொழிலதிபர் விளக்கமறியலில்!
வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் பெருந்தொகைப் பணத்தை நாட்டிற்கு வெளியே அனுப்பிய தொழிலதிபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதாகக் காட்டிக்கொண்டு சுமார் 190 பில்லியன் ரூபாவை நாட்டிற்கு வெளியே கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் வெள்ளவத்தையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெஃப்ரி முகமது, நீர்கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.
காவல்துறை நிதிமோசடி விசாரணை புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சந்தேக நபர், நேற்று (25-06-2026) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அரசாங்கத் தரப்பு
அதன்போது அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி ஒஸ்வல்ட் பெரேரா, சந்தேக நபர் வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 190 பில்லியன் ரூபாயைச் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஏ.ஒய். இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனம் மூலம் தந்தி வழிப் பணப் பரிமாற்ற முறையில் அமெரிக்க டொலர்களில் அந்தப் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
சந்தேக நபர், பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி பெருந்தொகைப் பணத்தை அவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ள போதிலும் அவருக்கு வரவு வைக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி எந்தவொரு கட்டத்திலும் நாட்டிற்குள் எதுவிதமான பொருட்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
வெளிநாடுகளுக்குப் பணம்
இந்தப் பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது அல்லது எந்த நோக்கத்திற்காக சந்தேக நபர் வெளிநாடுகளுக்குப் பணத்தை அனுப்பினார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணத்தையும் தனது பெயரிலான வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளார் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

சந்தேக நபருக்காக முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரரை எந்தவொரு நிபந்தனை அடிப்படையிலேனும் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கருத்தில் கொண்ட பிரதான நீதவான் போதரகம, பிணை மனுவை நிராகரித்துச் சந்தேக நபரை ஜூலை ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 14 மணி நேரம் முன்