நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 22 ஆவது திருத்தம்..!
அடுத்த நாடாளுமன்ற அமர்வில் உத்தேச 22 ஆவது திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிறைவேற்ற அதிகார முறையில் மாற்றம்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு உத்தேச 22ஆவது திருத்தச்சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவினை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் சபையில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த வரைவில் மேலும் திருத்தங்களைச் செய்வதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வதற்கும் வாய்ப்பு
மேலும் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளின் பிரகாரம் உத்தேச 22 ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கான வரைவில் திருத்தங்களைச் செய்வதற்கு தயாராகவே உள்ளோம். குறிப்பாக அத்திருத்தங்கள் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
இந்தச் செயற்பாட்டினை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கோருகின்றேன்" எனக் குறிப்பிட்டார்.