ஜனநாயகத்தை மதிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு கிடைத்துள்ள வெற்றி
இலங்கையில் சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்டுவதை நோக்கமாக கொண்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்க அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை ஜனநாயகத்தை மதிக்கும் இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் கிடைத்த வெற்றி என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முக்கிய திருப்பம்
நாடாளுமன்றத்தால் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமையானது, நாட்டின் இடைக்கால அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட தேவைகளுக்காக அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
22 ஆவது திருத்தச் சட்டமூலம்
எனினும் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் சரிவர நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மக்களின் ஜனநாயகத்தையும் கௌரவத்தையும் இந்த அரசியலமைப்பு காப்பாற்றும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.