நீர்கொழும்பு சிறையில் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் : 25 பேர் பலி! 13 பேர் கவலைக்கிடம்
புதிய இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 25 பேரில், 5 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கம்லத் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் காரணமாக சுமார் 100 பேர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பலத்த காயமடைந்த 13 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இன்று காலை நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்ட போது கைதிகள் சிறையின் பிரதான வாயில் வழியாக வெளியேற முயற்சித்தனர்.
மோதல் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினருடன் விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 4 சிறை அதிகாரிகள், மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்த அதிகாரிகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, விசேட மருத்துவ சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் ஐந்து பேரும், கைதிகள் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனையின் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையிலிருந்து மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உறவினர்கள் கோரிக்கை
அத்துடன் இந்த மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சிறைக்கு வெளியே கூடியுள்ள கைதிகளின் உறவினர்கள், அவர்களை வெளியே அழைத்து வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று இடம்பெற்று வரும் மோதலை கருத்திற்கொண்டு மேலதிக பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவ வீரர்கள் சிறைச்சாலை வளாகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |