உக்ரைன் போருக்காக ரஷ்ய படையில் இணைந்த 275 இலங்கையர்கள் பலி
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்த தெற்காசிய நாட்டவர்களில்,இலங்கையைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹிமால் சவுத்ஏசியன் (Himal Southasian) அறிக்கையில் இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த மோதல்களில் குறைந்தது 275 இலங்கையர்கள் இறந்துள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க் கைதிகளைக் கையாள்வதற்கும் வெளிநாட்டுப் போராளிகளைக் கண்காணிப்பதற்கும் பொறுப்பான அதிகாரபூர்வ அமைப்பான, உக்ரைனின் போர்க் கைதிகளைக் கையாளும் ஒருங்கிணைப்புத் தலைமையகம், ஹிமால் சவுத்ஏசியனுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்திற்கும் (OCCRP) வழங்கிய தரவிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத்தின் அறிவிப்பு
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது ரஷ்ய போர்க்களத்தில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும் இலங்கை அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட 59 உயிரிழப்புகளை விட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய இராணுவத்திற்குள் உள்ள ஆதாரங்களில் இருந்து, ஓரளவு பெறப்பட்ட தரவுத்தொகுப்பு, 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து 2025 செப்ரெம்பர் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியதாகும்.
கொல்லப்பட்டவர்களில் முதலிடத்தில் இலங்கையர்
ரஷ்யப் படைகளில் இணைந்த இலங்கை, நேபாளம், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மொத்தம் 455 தெற்காசியர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நாடுகளில் இருந்து ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக அறியப்பட்ட தெற்காசியர்களின் பெயர்களையும் தரவு குறிப்பிடுகிறது, இதில் 1923 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் இலங்கை முதலிடத்தில் உள்ளது, குறைந்தது 751 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதில், குறைந்தது 275 இலங்கையர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இலங்கையர்களின் உண்மையான எண்ணிக்கையும், போரில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகமாக இருக்கலாம்” என்று ஒருங்கிணைப்பு தலைமையகம் ஹிமாலிடம் தெரிவித்துள்ளது.
அதிகளவாக நேபாளத்தில் இருந்து 852 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 115 பேர் இறந்துள்ளனர், இது இலங்கைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
மொழித் தடைகள் அதிகளவு உயிரிழப்பிற்கு காரணம்
பங்களாதேசில், 104 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 170 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 18 பேரில் ஐந்து ஆப்கானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 22 பாகிஸ்தானியர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மொழித் தடைகள் மற்றும் நவீன சண்டை உபகரணங்கள் இல்லாதது ஆகியவை தெற்காசியர்கள் நடவடிக்கையில் கொல்லப்படுவதற்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் இராணுவத்தில் இணைந்த இலங்கையர்களும் பலி
ஒருங்கிணைப்பு தலைமையகத்தின் தரவுகளின்படி, ரஷ்யா 44 நாடுகளில் இருந்து 24,000 க்கும் மேற்பட்ட போராளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

இதற்கிடையில், உக்ரைன் இராணுவத்தில் இணைந்திருந்த நான்கு இலங்கையர்கள் போரில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இன்னும் ஐந்து இலங்கையர்கள் உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, ரஷ்ய இராணுவத்தில் இணைந்து போராடியபோது கைது செய்யப்பட்ட எட்டு இலங்கையர்கள் தற்போது உக்ரைன் அதிகாரிகளின் காவலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |