திருமலை கடற்றொழிலாளர்களை தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் அதிரடி கைது
திருகோணமலை (Trincomalee) - திருக்கடலூர் கடற்றொழிலாளர்களை தாக்கிய குற்றச்சாட்டில் வாழைச்சேனையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து குறித்த கடற்றொழிலாளர்களின் படகுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதுடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை துறைமுக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் துறைமுக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) நாடாளுமன்றத்தில் வைத்து துறை சார் அமைச்சருடன் பேசி தீர்க்கமான முடிவை தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
துறைமுக காவல் நிலையம்
இந்த நிலையில் குறித்த மூவரையும் நேற்று (05) கைது செய்து திருகோணமலை துறைமுக காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 32, 34, 38 வயதையுடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் தாக்குதலில் படுகாயமடைந்த கடற்றொழிலாளர்களுக்கு நீதி கோரி திருகோணமலையில் வீதி மறியல் போராட்டம் ஒன்றை திருக்கடலூர் கடற்றொழிலாளர்கள் நேற்று முன்னெடுத்திருந்தனர்.
இச்சம்பவத்தில் கைதான மூன்று சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
