ஐவர் படுகொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) உள்ளிட்ட மூவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூவருக்கும் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
துப்பாக்கியால் 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்று வரும் இந்த வழக்கு, இன்று (01.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
15திகதி வரை விளக்கமறியல்
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில், பதில் நீதவான் தலைமையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் மூவரும் இணையவழி காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் பரிசீலித்த நீதவான், குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 15திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலேயே குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இடம்பெற்று வருகிறது.
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜுன் 17ஆம் திகதி குற்றப் புலனாய்புத்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |