ஐவர் படுகொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட இருவரை எதிர்வரும் செப்டம்பர் 15 திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்சினி அன்னாத்துரை முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கின் 3ம் சந்தேக நபரான சி. சந்திரகாந்தன் (பிள்ளையான்) - முன்னிலைப்படுத்தப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள வெலிசர சிறைச்சாலையில் காணப்படும் இணையத்தடங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையவழி மற்றும் வட்ஸ்அப் ஊடாக இணைக்கமுடியவில்லையென சிறைச்சாலை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலை
மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த வழக்கு தொடர்பான தொடர்ச்சியான மேலதிக அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இவ்வழக்கு கடந்த ஜூன் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சந்திரகாந்தன், ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியில் வழங்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, 2008ஆம் ஆண்டு டி-56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |