இஸ்ரேலில் உள்ள 7,000 இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை : அரச தரப்பின் அறிவிப்பு
இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்குச் சென்ற சுமார் 7,000 இலங்கைத் தொழிலாளர்களை அகதிகளாகக் கருதி இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் பணியாற்றும் சுமார் 30 ஆயிரம் இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (20) நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக தனியார் முகவர் நிறுவனங்கள் மூலம் செல்வது அதிகரித்துள்ளது, இதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உரிய ஒழுங்குமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்குச் சென்ற சில இலங்கைத் தொழிலாளர்கள் தமது தொழில்துறைகளை மாற்றியுள்ளதால், சுமார் 7,000 பேரை அகதிகளாகக் கருதி இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்ற பிரச்சினையை எதிர்கொண்ட இந்தியத் தொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் தலையிட்டு தீர்வு பெற்றுக்கொடுத்ததைப் போன்று இலங்கை அரசாங்கமும் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கைத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் தொடர்பில் முன்னாள் அரசாங்க காலத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக தொழிலாளர்களை அனுப்புவதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முறையாக ஆட்களைச் சேர்த்து, நேர்முகத் தேர்வு நடத்தி வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டிய நடைமுறை இருந்தது.
எனினும், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் காலத்தில் அந்த நடைமுறையை மாற்றி, குறிப்பிட்ட நபர்களின் பட்டியலை அனுப்பி அவர்களை நிறுவனங்களுக்கு அனுப்புமாறு கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.
நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
இதனிடையே, இஸ்ரேலுக்கு விவசாயத் துறையில் வேலைவாய்ப்புக்காக அனுப்பப்பட்ட சில இலங்கைத் தொழிலாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட வேலைகளை முறையாக செய்ய முடியாத நிலையில், வேறு இடங்களில் பணியாற்ற ஆரம்பித்துள்ளனர்.
இதனால் அவர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகளாகக் கருதப்படும் நிலை ஏற்பட்டதுடன் அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மன்னிப்பு காலம் வழங்கப்பட்டது.

எனினும், இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, குறித்த தொழிலாளர்களுக்கு அந்நாட்டில் சட்டபூர்வமாக வேலை செய்வதற்கான வாய்ப்பு அல்லது மாற்று வழியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
எதிர்காலத்தில் இஸ்ரேல் அரசாங்கத்தினால் மீண்டும் மன்னிப்பு காலம் வழங்கப்பட்டால், அதனை முழுமையாகப் பயன்படுத்தி இலங்கைத் தொழிலாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தலையிடும்.
முன்னைய காலப்பகுதியில் சுமார் 6,000 இலங்கையர்களை மேலதிகமாக இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது, அதனுடன் தொடர்புடைய பணப்பரிமாற்றங்கள் மற்றும் ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக இஸ்ரேல் தரப்பில் மன்னிப்பு காலம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டது.
எனினும், தற்போது கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தொடர்ந்து தலையிட்டு வருகின்றது“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4