வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம்...! முற்றுகையிட்ட காவல்துறையினர்
அம்பாறையில் வீடொன்றின் மொட்டை மாடியில் மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்ட பயிர்ச்செய்கையை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் (19-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியிலேயே இவ்வாறு தோட்டபயிர்ச்செய்கை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களான ஜவாத் (71380) மற்றும் இஸ்மத் (88503) ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை தலைமையக காவல் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோதே குறித்த வீட்டின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது.
கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம் மற்றும் புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில் இரகசியமாக இலங்கை நாட்டு கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமை காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முறைப்படியான பயிர்ச்செய்கை
குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் மிகவும் பாதுகாப்பாக ஒரு முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அங்கு வளர்க்கப்பட்ட செடிகளைக் கைப்பற்றிப் பிடுங்கி கல்முனை தலைமையக காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனைத் தலைமையகப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |