உக்ரைனில் உடனடியாக ஜனாதிபதி தேர்தல்...! ஜெலென்ஸ்கிக்கு எதிராக உருவெடுக்கும் அரசியல் சவால்
உக்ரைனில் ரஷ்யப் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நாட்டில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் (Mykhailo Fedorov) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு எதிராக இது உக்ரைனிய அரசியலில் மிகப்பெரிய அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது.
ரஷ்யாவின் பிணைக்கைதி
இது தொடர்பில் மைக்கைலோ ஃபெடோரோவ் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீடித்த போருக்கு மத்தியிலும் உக்ரைன் தனது முழுமையான ஜனநாயகச் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சட்டப்பூர்வ, பாதுகாப்பான மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான வழியைக் கண்டறிய வேண்டும்.
உக்ரைனின் ஜனநாயகத்தை ரஷ்யாவின் பிணைக்கைதியாக மாற்ற முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் 2022 இல் ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இராணுவச் சட்டம் (Martial Law) நடைமுறையில் உள்ளது.
உக்ரைனிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது நாட்டில் ஜனாதிபதி, நாடாளுமன்றம் அல்லது உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த முடியாது.
பதவி காலம்
ஜெலென்ஸ்கியின் 5 ஆண்டு காலப் பதவி காலம் கடந்த 2024 மே மாதத்துடன் முடிவடைந்தது.
இருப்பினும், புதிய ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்கும் வரை தற்போதைய ஜனாதிபதியே பதவியில் தொடருவார் என உக்ரைன் அரசியலமைப்பின் 108 ஆவது பிரிவு குறிப்பிடுகிறது.

போர் தீவிரமாக இருக்கும் சூழலில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பதே ஜெலென்ஸ்கியின் உறுதியான நிலப்பாடாக உள்ளது.
இந்தநிலையில் அரசு நிர்வாகத்தில் நிலவும் பணமோசடி மற்றும் ஊழல் விசாரணைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் இரினா முத்ராவை (Iryna Mudra) ஜெலென்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளார்.
அமைச்சரவை மற்றும் ராணுவப் பொறுப்புகளில் ஜெலென்ஸ்கி மேற்கொண்டு வரும் இந்த தொடர் மாற்றங்களும், அதிகாரிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளும் உக்ரைனிய உள்நாட்டு அரசியலில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |