கண்டி மாவட்டத்தில் ஆரம்பமாகும் விசேட குடிநீர் விநியோகத் திட்டம்
கண்டி மாவட்டத்தில் சில பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண 38 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கி விரிவான நீர் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
குறித்த தகவலை சபையின் பொறியியலாளர் சாந்த பண்டார, கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் குண்டசாலை, பல்லேகலை, ஹாரகம, பாத்தஹேவாஹெட்ட, பாத்ததும்பறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 06 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பணிகள் இடைநிறுத்தப்பட்டது
இத்திட்டம் முதன்முதலில் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், பின்னர் ஒப்பந்தத்தை பெற்றிருந்த இந்திய நிறுவனம் 2019 ஆம் ஆண்டு முறிவடைந்ததால் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்திட்டத்திற்கான நீர் வளம் கட்டுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்லை பகுதிகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |