சக மாணவனின் செவிப்பறை பாதிக்கும் வகையில் கடுமையாகத் தாக்கிய 4 மாணவர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் ஒரு மாணவனின் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரும் இன்று (12) மாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த புதன்கிழமை (08) மாலை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
13 வயது மாணவன்
யாழ் நகரில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தாக்குதலுக்குள்ளான மாணவனுடைய செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் நேற்றைய தினம் மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சீர்திருத்தப் பாடசாலையில் தங்கவைத்தல்
அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது மாணவனை சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் தங்கவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த மாணவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மூன்று மாணவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று மாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்புகையிலேயே குறித்த மாணவன் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
