விரைவில் சிக்கப்போகும் 40 முன்னாள் எம்.பிக்கள் : விமல் வீரவன்ச அதிரடி
அரசாங்கம் தன்னையும் 40 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் தொடர்பில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி செயலகம் கைது செய்யப்படவேண்டிய 40 அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை இலஞ்ச ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைகுழுவிடம் கையளித்துள்ளது.
சட்ட நடவடிக்கை
குறிப்பிட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவின் இயக்குனர் ஜனாதிபதி செயலகத்திற்கு அடிக்கடி விஜயம் மேற்கொள்கின்றார்.
அந்த பட்டியலில் எனது பெயர் உள்ளது, காஞ்சன விஜயசேகர, ரமேஷ் பத்திரன, ஆகியோரின் பெயர்களும் உள்ளன மேலும் மகிந்தானந்த அளுத்கமகேயும் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
உள்ளூராட்சி சபை தேர்தல்
முன்னைய அமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் அமைச்சுகளின் கீழ் வரும் திணைக்களங்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பிலேயே விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
மே மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல்களின் பின்னரே எனது பெயரை கைது செய்யப்பட வேண்டிய அரசியல்வாதிகளின் பட்டியலில் சேர்த்தார்கள்.
ஊழல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை கைது செய்யாமையினாலேயே தனக்கான வாக்குகள் குறைவடைந்தன என அரசாங்கம் கருதுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
