தொன்கணக்கில் குப்பை காடாக காட்சியளிக்கும் கண்டி : திணறும் அதிகாரிகள்
புத்தபெருமானின் பல் நினைவுச்சின்னத்தை வழிபடுவதற்காக கண்டி(kandy) தலதா மாளிகைக்கு பத்து நாட்களில்,குவிந்த பக்தர்களால் 600 தொன் குப்பைகள் மிகவும் ஒழுங்கற்ற முறையில் சுற்றுச்சூழலில் வீசப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளரும், திடக்கழிவுப் பிரிவின் தலைவருமான நாமல் தம்மிக்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் குப்பைகளுக்கு மத்தியில் பிளாஸ்டிக் பைகளில் வீசப்பட்ட மலம் மற்றும் சிறுநீர் கூட இருப்பதாகவும், அவற்றைப் பிரிப்பது கூட மிகவும் கடினமான பணியாகிவிட்டது என்றும் திசாநாயக்க கூறுகிறார்.
528 தொன் குப்பைகள் அகற்றல்
பல் நினைவுச்சின்னத்தை பார்ப்பதற்கான கடைசி நாளான இன்று (27) நண்பகல் 12.00 மணி வரை, 528 தொன் குப்பைகள் குஹாகொட குப்பை கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
பல் நினைவுச்சின்னத்தை வழிபட வந்த ஒரு பக்தர் ஒரு கிலோகிராம் குப்பைகளை விட்டுச் சென்றதாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.
குப்பைகள் குவிவதற்கு முக்கிய காரணம்
இவ்வளவு பெரிய அளவிலான குப்பைகள் குவிவதற்கு முக்கிய காரணம், மிகவும் ஒழுங்கற்ற முறையில் அன்னதானம் விநியோகிக்கப்பட்டதுதான் என்று திசாநாயக்க கூறினார். பக்தர்களுக்கு தேவையற்ற அன்னதானம் விநியோகம் செய்யப்பட்டதால், அவர்களுக்குக் கிடைத்த பல உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் சாலையில் கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இனிமேல், நன்கொடைகள் வழங்கும் தனிநபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது முறையான அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
