பஷிலுக்கு 7 மூளையா? இவ்வளவு காலம் என்ன செய்தார்! - எதிர்க்கட்சி கேள்வி
பஷில் ராஜபக்க்ஷவுக்கு 7 மூளைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். அந்த 7 மூளைகளையும் வைத்துக் கொண்டு இவ்வளவு காலம் என்ன செய்தார் ? எனவே அமைச்சு பொறுப்பை ஏற்று அவர் தோல்வியடைகிறாரா அல்லது வெற்றியடைகிறாரா என்பதை சில மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பஷில் ராஜபக்க்ஷவுக்கு 7 மூளைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். அந்த 7 மூளைகளையும் வைத்துக் கொண்டு இவ்வளவு காலம் என்ன செய்தார்? இன்னும் சிறிது காலம் செல்லும் போது யுத்த வெற்றியின் திரைக்கு பின்னாலும் பஷில் ராஜபக்க்ஷவே உள்ளார் என்று கூறினாலும் நாம் புதுமையடைப் போவதில்லை.
எனவே பஷில் ராஜபக்க்ஷ தொடர்பில் நான் தற்போது எதையும் கூற முற்படவில்லை. பொதுஜன பெரமுன அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அவரே சகலவற்றையும் செய்தார். ஜனாதிபதி செயலணிகளினும் தலைவராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
ஆனால் அமைச்சொன்று இல்லாமல் எதனையும் செய்ய முடியாது என்றும் கூறுகின்றனர். எனவே அமைச்சு பொறுப்பை ஏற்று அவர் தோல்வியடைகிறாரா அல்லது வெற்றியடைகிறாரா என்பதை சில மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். மக்கள் இவ்வாறு தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
69 இலட்சம் வாக்குகளில் தற்போது எத்தனை வாக்குகளைப் அவர்களால் பெற்றுக் கொள்ள முடியும் ? எனவே பஷில் ராஜபக்க்ஷவுக்கு நாடாளுமன்றத்திற்கு வர இடமளிப்போம். இறுதியாக பஷில் ராஜபக்க்ஷவுக்கும் நாட்டை நிர்வகிக்க முடியாது.
சகலருக்கும் 70 வயது கடந்துவிட்டது. எனவே நாமல் ராஜபக்க்ஷவே அடுத்த தலைவர் என்று கூறினாலும் புதுமையடைவதற்கு ஒன்றுமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.