அமைச்சு பதவிக்காக மனசாட்சியை காட்டிக் கொடுக்க தயாரில்லை : புதிய கூட்டணியை ஆரம்பிக்கும் 7 முஸ்லிம் எம்.பிக்கள்
நாட்டில் உள்ள இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அந்த கட்சிகளில் இருந்து விலக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் றிசார்ட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கட்சிகளில் இருந்த விலக தீர்மானித்துள்ளனர். இவர்களில் கட்சிகளில் இருந்து விலகி, தனியாக முஸ்லிம் கூட்டணி ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர்.
புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டணியில் இணையுமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியை உருவாக்கிய பின்னர், தமது அரசியல் கொள்கைகள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். கூட்டணியை அமைத்த பின்னர், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதற்கான பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் நடத்த தயார்ப்படுத்தல்கள் முன்னெடுப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளில் இருந்து விலகிய பின்னர், இந்த கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசார்ட் பதியூதீன் ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே எஞ்சி இருப்பார்கள்.
இது இந்த கட்சிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் காரணமாக அவர்களுக்கு எதிராக கட்சிகளுக்கு ஒழுங்கு விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியிலேயே குறித்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளில் இருந்து விலகி புதிய கூட்டணியை உருவாக்க தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகள் இவ்வாறு பிளவுப்பட்டு பலவீனமடைவது அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
அரசாங்கத்திற்குள் இருக்கும் பல்வேறு தரப்பினர், அரசாங்கத்தை விமர்சித்து, அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ள நேரத்தில், அரசாங்கத்துடன் இணையும் நோக்கில் இந்த புதிய முஸ்லிம் கூட்டணி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கையின் ஊடாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகள் நடத்தப்படும் போது, அதனை வெற்றி பெற செய்ய சவால்கள் இல்லாத நிலைமையை உருவாக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த போதே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நோக்கி,அரசியல் களத்தில் கூடுதல் கவனம் திரும்பியது. முஸ்லிம் கட்சிகளை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அரசாங்கத்தில் இருக்கும் சிறிய கட்சிகள் மற்றும் அணிகள் 20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க கூடும் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் பெற்றுக்கொண்டதாக அப்போது பேசப்பட்டது. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவும் 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து ஆளும் கட்சியுடன் இணைந்துக்கொண்டார்.
இதனிடையே அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்து வரும் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வந்த அத்துரலியே ரதன தேரர் ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிராக பகிரங்கமாக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மூன்று அமைச்சர்கள் யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தமை உற்று நோக்கும் நடவடிக்கையாக காணப்பட்டது. அமைச்சு பதவிக்காக மனசாட்சியை காட்டிக் கொடுக்க தயாரில்லை என அமைச்சர் விமல் வீரவங்ச கூறியிருந்தார். அரசாங்கம் தவறு செய்யும் போது அமைதியாக இருக்க முடியாது எனவும் யார் செய்தாலும் தவறு தவறுதான் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான அரசியலில் சூழ்நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வீரவங்ச உள்ளிட்டோர் அரசாங்கத்தில் இருந்து விலகும் அல்லது விலக்கப்படும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் பலத்தை தக்கவைப்பதற்காக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசியல் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.