சுற்றுலா விசாவில் தங்கி இருந்து கைவரிசை: பாரிய நிதி மோசடியில் சிக்கிய வெளிநாட்டவர்கள்
விசா விதிமுறைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனைகளின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலாவது சம்பவத்தில் கொள்ளுப்பிட்டி உத்தரானந்த மாவத்தையிலுள்ள வீட்டுத் தொகுதி ஒன்றில் நேற்று மாலை (06-05-2026) 74 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டவர்கள்
இதன் போது 41 ஆண்கள் மற்றும் 33 பெண்கள் உட்பட மொத்தம் 74 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 39 வயதுக்கு இடைப்பட்ட வியட்நாம் நாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, இரண்டாவதாக காந்தர - தலல்ல பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (06-05-2026) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஒரு பெண் உட்பட மேலும் ஆறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியாபார நடவடிக்கை
மாத்தறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சந்தேகநபர்கள் முறையான விசாக்கள் இன்றி நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா விசாவில் தங்கியிருந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டமை மற்றும் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட தாய்வான் மற்றும் சீன நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காந்தர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |