ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டவுள்ள கோடிக்கணக்கான கட்டணம்
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தில், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணமாக ரூ. 18.5 கோடி வசூலிக்கப்படும் என்று ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 40 நாள்களுக்கு மேலாக நீடித்து வந்த போர், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின்பேரில் இரு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானிடம் இருந்து பெறப்பட்ட 10 அம்ச முன்மொழிவுகளில் அனைத்தும் கிட்டத்தட்ட ஒப்புக்கொள்ளப்படுவதாகவும், ஒப்பந்தத்தை இறுதிசெய்ய இரு வாரங்கள் கால அவகாசம் ஆகும் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஈரான் விதித்துள்ள நிபந்தனைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் சரக்கு கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதாகும்.
சரக்கு கப்பல்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் கட்டணம்
34 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த நீரிணை வழியாக, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த நிலையில், ஹோர்முஸ் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பின்படி ரூ. 18.5 கோடி) கட்டணம் வசூலிக்கப்படும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பை சீர்செய்யவுள்ள ஈரான்
ஓமன் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் பிராந்திய எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் ஹோர்முஸ் நீரிணை அமைந்துள்ளதால், சுங்கக் கட்டணத்தை ஓமானுடன் பகிர்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் மூலம் போரால் பாதிக்கப்பட்ட ஈரானின் உள்கட்டமைப்பை சரிசெய்யப் போகிறோம் எனவும் ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிபந்தனைகள் தொடர்பாக வருகின்ற வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. அப்போது, ஹோர்முஸ் நீரிணை சுங்கக் கட்டண விவகாரம் பற்றி விரிவாக விவாதிக்கப்படவுள்ளன.
சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை
போர் காரணமாக இந்த நீரிணையை ஈரான் மூடியதால், சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நீரிணையை திறக்காவிட்டால் புதன்கிழமை இரவு ஈரானின் நாகரீகமே இல்லாத வகையில் அழிவைச் சந்திக்கும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதாக ஈரானும் அமெரிக்காவும் அறிவித்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை இரு வாரங்கள் திறக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |