பலத்த காற்றுடன் கூடிய மழை நிலவும் சாத்தியம் - இன்றைய வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று (27) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் , ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மக்கள் எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கோரியுள்ளது.