170 ஆண்டுகளாக காணப்படாமல் இருந்த அரிய தாவரம் இலங்கையில் பதிவு
இலங்கையில் 1855-ஆம் ஆண்டு கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட, மிகவும் அரிதான ஒரு தாவர இனத்தின் கூட்டம், சீதாவக்க கங்கை ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு தாழ்நில வனப்பகுதியில் வளர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் .
சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்தக் கண்டுபிடிப்பை ஆவணப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள் , இண்டியன்தஸ் விர்கேட்டஸ் (Indianthus virgatus) என்ற அந்தத் தாவரம் இலங்கையில் அதிகாரப்பூர்வமாக மிக அருகிவரும் இனமாகப் பட்டியலிடப்பட்டிருந்தாலும், அந்நாட்டின் காடுகளில் அது அநேகமாக அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டதாக எழுதியுள்ளனர்.
சிறிய வெள்ளைப் பூக்களைக் கொண்ட ஐ. விர்கேட்டஸ், ஈரமான வெப்பமண்டலக் காடுகளின் அடர்வனப்பகுதியில் வளர்கிறது.
சரிபார்க்கப்பட்ட ஒரே பதிவு
இது இந்தியாவில் சுமார் 150 இடங்களில் காணப்படுவதாக அறியப்படுகிறது, ஆனால் இலங்கையில் இந்தத் தாவரம் இருப்பதற்கான சரிபார்க்கப்பட்ட ஒரே பதிவு, 1855-ல் சேகரிக்கப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து மட்டுமே கிடைக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இந்தியா மற்றும் இலங்கை முழுவதிலுமுள்ள வரலாற்றுப் பதிவுகளையும், சாத்தியமான வாழ்விடங்களைக் கண்டறிவதற்கான முன்கணிப்பு வாழ்விட மாதிரியாக்கத்தையும் ஒருங்கிணைத்து, ஆராய்ச்சியாளர்கள் தென்மேற்கு இலங்கையின் சபரகமுவ மாகாணத்தில் அந்தத் தாவரத்தைத் தேடினர்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஆய்வுக் குழு 70 முதல் 100 வரையிலான ஐ. விர்கேட்டஸ் (I. virgatus) உயிரினங்களின் ஒரு சிறிய கூட்டத்தை வெற்றிகரமாகக் கண்டறிந்தது.
இந்த உயிரினம் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமானது என்று ஆய்வாளர்கள் கணித்திருந்த ஒரு பகுதியில் இந்தக் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
இண்டியன்தஸ் பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமான ஐ. விர்கேட்டஸ் , தனித்துவமான பரிணாம மற்றும் உயிர் புவியியல் சூழலைக் கொண்டுள்ளது என்று, இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், இந்தியாவின் மணிப்பால் உயர் கல்வி அகாடமியின் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல் உதவிப் பேராசிரியருமான விவேக் பாண்டி கூறினார்.
இந்தியத் துணைக்கண்டம் மற்றும் இலங்கை முழுவதும் இந்த இனம் துண்டிக்கப்பட்டுக் காணப்படுகிறது, அதாவது இதன் இனக்கூட்டங்கள் ஒரு பெரிய புவியியல் இடைவெளியால் பிரிக்கப்பட்டுள்ளன என்று பாண்டி தெரிவித்தார்.
சுவாரஸ்யமான கேள்வி
இது ஒரு சுவாரஸ்யமான கேள்வியை எழுப்புகிறது என்றும் அவர் மேலும் கூறினார்;

அதாவது, ஒரு காலத்தில் தொடர்ச்சியாக இருந்த இந்தத் தாவரத்தின் இனக்கூட்டத்தை ஏதேனும் ஒரு பண்டைய புவியியல் நிகழ்வு இரண்டு தனித்தனி குழுக்களாகப் பிரித்ததா; அல்லது இந்த இனம் பின்னர் நீண்ட தூரப் பரவல் மூலம் இலங்கையை அடைந்ததா?
இலங்கையின் காடுகளில் 170 ஆண்டுகளாக ஐ. விர்கேட்டஸ் இனம் பதிவு செய்யப்படாமல் இருந்தபோதிலும் , பல தசாப்தங்களாக வனப்பகுதிகளின் பாதுகாப்பான இடங்களில் இந்த இனம் கண்டறியப்படாமல் உயிர் பிழைத்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுவதாக பாண்டி கூறினார்.
பாண்டியின் கூற்றுப்படி, சுற்றியுள்ள நிலப்பரப்பில் கடுமையான இடையூறுகள் ஏற்பட்டபோதிலும், நிலையான நுண் தட்பவெப்ப நிலைமைகளைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய, ஈரமான, நிழலான காடுகளின் சிறிய எச்சங்கள், பொதுவாக நீரோடைகள் மற்றும் பாதுகாப்பான சரிவுகளைச் சுற்றி, இந்தப் பகுதிகளில் அடங்கியுள்ளன.
" ஐ. விர்கேட்டஸின் மறு கண்டுபிடிப்பு, சிறியதாகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தோன்றும் இந்தக் காட்டு எச்சங்கள், அதிகம் அறியப்படாத உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது," என்று பாண்டி கூறினார்.
நுண் புகலிடங்களைப் பாதுகாத்தல்
இலங்கையில் இத்தாவரத்திற்கு ஏற்ற பெரும்பாலான வாழ்விடங்கள் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களால் அழிக்கப்பட்டுவிட்டதால், இந்த நுண் புகலிடங்களைப் பாதுகாப்பது அவசரமானது என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள இத்தாவரக் கூட்டங்களும் வாழ்விடம் தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என்று பாண்டி கூறினார்.
இலங்கையில் புதிதாகக் கண்டறியப்பட்ட இந்தத் தாவரக் கூட்டத்தைத் திறம்படப் பாதுகாப்பதற்கு, உடனடி உள்ளூர் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்களில் இத்தாவரத்தின் சேகரிப்புகளை நிறுவுவதற்கான முயற்சிகள் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைப்பது அவசியமாகும் என அந்த ஆய்வின் ஆசிரியர்கள் எழுதுகின்றனர்.
ஐ. விர்கேட்டஸின் பாதுகாப்பு நிலையை ஐயூசிஎன் செம்பட்டியலுக்காகவும் மதிப்பிட வேண்டும் என்றும், அப்போதுதான் அதன் பாதுகாப்பை தேசிய மற்றும் பிராந்திய பல்லுயிர் செயல் திட்டங்களில் ஒருங்கிணைக்க முடியும் என்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |