குறைபாடுகளை செவிமடுக்க மறுத்தால் மாற்று நடவடிக்கை - அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
தற்போதைய அரசாங்கத்தில் எல்லாமே நகைச்சுவையாக மாறிவிட்டதாகவும், இதை ஒரு பொம்மை அரசாங்கமாக தான் பார்ப்பதாகவும் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு முன்னின்று செயல்பட்ட அரசாங்க ஆதரவு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (18) நாரஹேன்பிட்ட அபயராம விகாரையில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்தார். அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கேலிக்கு உரியதாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச சேவை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு போன்றவை சுயாதீனமாக இயங்கவில்லை எனவும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அரசியல்வாதிகள் தங்களுக்கு தேவையான விடயங்களை மாத்திரமே செய்து கொள்வதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுகின்ற போதிலும் அதற்கு செவிமடுக்க மறுத்தால் மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றறிக்கைகள் விடுவதும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதும் பின்னர் அவற்றை மீளப் பெற்றுக் கொள்வதும் என இந்த அரசாங்கம் கேலிக்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து விளையாட்டு அரசாங்கம் என்பதை நிரூபித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.