இஸ்ரேல் தலைநகரில் பொதுமக்கள் மீது காரால் மோதி தாக்குதல்!
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் சார்லஸ் குளோர் பூங்கா பகுதியில் எரிவாயு நிரப்பும் நிலையம் அருகே பயங்கரவாதி அமைப்பை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகிழுந்தை கொண்டு பொதுமக்களை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும், டெல் அவிவ் நகர நகராட்சி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.
பொதுமக்களின் சத்தம் கேட்டு அருகே இருந்த அதிகாரிகள் உதவிக்கு ஓடியுள்ளனர். அந்த மகிழுந்தின் ஓட்டுநர், மகிழுந்தில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுக்க முயற்சித்ததாகவும் உடனடியாக, காவல்துறையினர் மற்றும் ஆய்வாளர்கள் குறித்த ஓட்டுநரை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கான நோக்கம்
குறித்த பயங்கரவாதியின் தாக்குதலில், குடிமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் டெல் அவிவ் நகர காவல் அதிகாரி அமிசாய் ஈஷெட் கூறும்போது,
"சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி, சைக்கிள் நிறுத்திய பகுதியில், மக்கள் பலரை இலக்காக கொண்டு, தெளிவான திட்டத்துடன் மோதி, விபத்து ஏற்படுத்தி உள்ளார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பின்னணி, தாக்குதலுக்கான நோக்கம், தடயம் உள்ளிட்டவற்றை பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்." என அவர் கூறியுள்ளார்.
கடும் நடவடிக்கை
தாக்குதலுக்கு உள்ளவர்கள் அனைவரும் சுற்றுலாவாசிகள் என கூறப்படுகிறது.
இதில் பலியான நபருக்கு 30 வயது இருக்க கூடும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த பகுதியை மூடி, காவல்துறையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
