வீட்டிலிருந்து சொற்ப தூரத்தில் காணாமற்போன யுவதி -ஆழ்ந்த கவலையில் உறவுகள்
100 மீற்றர் மட்டுமே சென்ற யுவதியை, கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என கம்பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா முனவுவரமா என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போனவராவார்.
குறித்த யுவதி, கெலிஓயா நகரிலுள்ள பாமசி விற்பனை நிலையத்தில் பணியாற்றுக்கின்றார் என யுவதியின் சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்தார்.
வீட்டிலிருந்து நடந்து செல்லும் காட்சி
வீட்டிலிருந்து அவர் நடந்து செல்லும் காட்சி, எல்பிட்டிய பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் இறுதியாக பதிவாகியுள்ளது. அவ்விடத்துக்கு அப்பால் இருக்கும் எந்தவொரு கமராக்களிலும் அந்தக் காட்சி பதிவாகவில்லை. அவரை கண்டவர்கள் யாரும் இல்லையெனவும் சகோதரன் தெரிவித்துள்ளார்.
தீவிர தேடுதலில் காவல்துறை மற்றும் கிராமத்தவர்கள்
பணியாற்றும் இடத்துக்கு செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) வீட்டிலிருந்து புறப்பட்டு, பேருந்துக்காக மட்டும் தன்னிடம் 100 ரூபாவை வாங்கிச் சென்றார் என்றும், தன்னுடனும் வேறு எவருடனும் எவ்விதமான மனஸ்தாபங்களும் இல்லையென்றும் யுவதியின் தாய் சின்னி சாஹிரா தெரிவித்தார்.
யுவதியை, கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய, மகாவலி கங்கை, இவர உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் கிராமத்தவர்கள், கம்பளை காவல்துறையினர் இணைந்து தேடிவருகின்றனர்.
